உலகம் வியந்து பார்க்கும் வியட்நாம்: உயிர்ப் பலி இல்லாமல் கொரோனாவை வென்றது எப்படி?
வியட்நாம் நாட்டில் கொரோனா காரணமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது, உலகளவில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சீனாவுடன் மிக நீள எல்லையைக் கொண்டுள்ள வியட்நாம் நாட்டில் 97 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.
இந்நிலையில், அங்கு 300 பேர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதலாவது கொரோனா நோயாளி அங்கு அடையாளம் காணப்பட்டார்.
வியட்நாம் நாட்டில் வசித்து வரும் தனது மகனைப் பார்ப்பதற்கு சீனாவின் வுஹானிலிருந்து சென்றிருந்த ஒருவருக்கே முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அன்றிலிருந்து பயணத்தடை விதிக்கப்பட்டு, சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் சீன எல்லைப்பகுதி மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
சீனாவிலிருந்து வியட்நாம் செல்ல முற்றாகத் தடை விதிக்கப்பட்டதுடன் , விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன.
இதனாலேயே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடிந்ததாகத் தெரிவித்துள்ள வல்லுநர்கள், இவ்வாறான கட்டுப்பாடுகளை முன்னெடுக்க மற்றைய நாடுகளுக்கு சில மாதங்களானதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.