மே மாத சம்பளத்தை வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பி.பி. ஜயசுந்தர கேட்டமை, அரசாங்கத்தின் கோரிக்கையல்ல: பந்துல விளக்கம்

🕔 May 8, 2020

ரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த கோரிக்கை – அரசாங்கத்தினுடையது அல்ல என்றும், அது ஜயசுந்தரவின் தனிப்பட்ட கோரிக்கை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்;

“பொருளாதாரம் தடைப்பட்டுள்ளதால் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் பிரதான வருமான வழிகளை இழந்துள்ளது. சுங்கம் உள்ளிட்ட திணைக்களங்களால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பாரிய வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. கலால்வரி மூலம் கிடைக்கும் பெருந்தொகை வரி இழக்கப்பட்டுள்ளது. வருமான வரித் திணைக்களத்திற்கு கிடைக்கும் பொருட்களுக்கான வரிகளை அறவிட முடியாது. இதனால் திறைசேரிக்கு நிதி வரவேண்டிய சகல வழிகளும் தடைப்பட்டுள்ளன.

அரச ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளின் ஓய்வூதியக் கொடுப்பனவு, அரச கடனுக்காக வழங்கப்பட வேண்டிய வட்டி, சமுர்த்தி நிவாரணம் போன்றவற்றுடன் ஏனைய நிதி செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினையாக வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணை, அதற்கான வட்டியை செலுத்துதலும் காணப்படுகிறது.

மிகவும் சிரமத்துடன் அரச நிதி முகாமைத்துவம் செய்யப்படுகின்ற நிலையில், பொதுத்துறையின் தலைவரான ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவினால் ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனிப்பட்ட முறையீடு – அரச பிரிவு தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆகவே, எவ்விதத்திலும் அது அரசாங்கத்தின் அறிக்கை அல்லவெனவும் விருப்பமானவர்கள் இந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்துக்கு பங்களிப்பு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன விளக்கமளித்தார்.

“ஒவ்வொரு நிறுவனத்திலும் பணியாற்றும் தேசத்தவர்களால் ஆற்றப்பட வேண்டிய கடப்பாடு ஒன்று உள்ளது. விருப்பமில்லாதவர்கள் அதனை செலுத்தாமல் இருப்பதற்கு உரிமையுள்ளது. எனவே, சேறு பூசும் செயற்பாட்டை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மே மாத சம்பளத்தை, அல்லது அதன் ஒரு பகுதியை அல்லது மே மாதத்தின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குமாறு, அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே, அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதங்களின் சம்பளங்களிலும் ஒரு பகுதியை, அரசாங்க தரப்பின் கோரிக்கைக்கு அமைய அரச ஊழியர்கள், கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்