அதாஉல்லாவுக்கு விழுந்த, அடிமேல் அடி

🕔 March 24, 2020

– முகம்மது தம்பி மரைக்கார் –

வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது உலகம். அனைத்து ஒழுங்குகளையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலொன்று ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் புதியதொரு அனுபவத்தை நாடு எதிர்கொண்டிருக்கிறது. உயிர் பற்றிய அச்சம் மக்களிடம் தொற்றிக் கொண்டுள்ளதால், அரசியல் பற்றிய பேச்சுகள் அமுங்கிப் போய் கிடக்கின்றன.

ஆனாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தை விடவும் பெரிய அழிவுகளையெல்லாம்  உலகம் எதிர்கொண்டிருக்கிறது.

ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தினம்; மே 15ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியிருக்கின்றார். அதற்குள் கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். இல்லா விட்டால், பொதுத் தேர்தலுக்கான தினம், இன்னும் தூரமாகிச் செல்லும் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது போகும்.

எவ்வாறாயினும் ஜும் 03ஆம் திகதிக்குப் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திப் போட சட்டத்தில் இடமில்லை என்கிறார் சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட். “நாடாளுமன்றம் மீண்டும் கூடும் திகதியாக மே 14 பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் அதற்கு முன்னதாக, தேர்தலை நடத்தியாக வேண்டும். அல்லது நாடாளுமன்றம் கூடும் திகதியை ஜனாதிபதி ஒத்திப்போடலாம். ஆனால் அதுவும்  ஜூன் 03ஆம் திகதிக்குப் பிந்தாத வகையில் இருக்க வேண்டும்” என்று ஹமீட் விவரிக்கின்றார்.

பெரும் சமர்

196 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக நாடு முழுவதும் 7452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் 304 அரசியல் கட்சிகள் சார்பிலும், 313 சுயேட்சைக் குழுக்கள் சார்பாகவும் களமிறங்கியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு போட்டியிடுகின்றமையினால், வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகரித்திருக்கிறது. மறுபுறமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் சஜித் பிரேமதாஸ தலைமையில் ‘ஐக்கிய மக்கள் சக்தி’ எனும் கூட்டணியாக தொலைபேசி சின்னத்திலும், ரணில் விக்ரமசிங்க தலைமையில் யானைச் சின்னத்திலும் போட்டியிடுகின்றமையானது, பல மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவுக்கு சாதகமான நிலைவரத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறமாக, சஜித் அணியுடன் சிறுபான்மைக் கட்சிகள் கைகோர்த்து, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதால், ரணில் அணியை விடவும் சஜித் அணி, அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன.

குறிப்பாக ரஊப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை சஜித் பிரேமதாஸ அணியுடன் கூட்டு வைத்து, பல மாவட்டங்களில் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இருந்தபோதும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், சஜித் அணியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் களமிறங்கியுள்ளது.

07 நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில், கடந்த முறை ஐக்கிய தேசியக் கட்சி, 04 ஆசனங்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பெற்றது. அந்த நான்கு ஆசனங்களில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸுக்கு 03 ஆசனங்கள் கிடைத்தன. அதேதேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சுமார் 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற நிலையில், மிகக் குறைந்த வாக்குகளினால் ஆசனமொன்றைப் பெறும் வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில்தான், இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சஜித் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டிட வருமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸை, முஸ்லிம் காங்கிரஸ் பல தடவை அழைத்த போதும், மக்கள் காங்கிரஸ் தனித்தே களமிறங்கியுள்ளது. ஆசன ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழுபறியே, சஜித் கூட்டணியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட முடியாமைக்கான காரணமாகும் என்று, மக்கள் காங்கிரஸ் கூறுகிறது.

அதாஉல்லாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் தரப்பினர், இறுதி நேரத்தில் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் ‘மொட்டு’ச் சின்னத்தில் அதாஉல்லாவும், அவரின் அணியைச் சேர்ந்த இருவருமாக – மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என்பதுதான் இறுதிவரையிலான பிரசாரமாக இருந்தது. ஆனால், மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதை, பொதுஜன பெரமுன தரப்பைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க விரும்பவில்லை. அதனால், இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே களமிறக்க முடியும் என, அதாஉல்லா தரப்புக்கு கூறப்பட்டது. இதற்கு அதாஉல்லா ஒத்துப் போகாமல், தனது தேசிய காங்கிரஸ் கட்சியில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்து, வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா, அரசியலில் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டார். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியடைந்தவுடன், அரசியலில் மீண்டும் அதாஉல்லா உற்சாகமானார்.

இதனையடுத்து அம்பாறை மாவட்டத்தில் அதாஉல்லாவுடன் மாற்றுக் கட்சிக்காரர்கள் பலர் இணைந்து கொண்டனர். சாய்ந்தமருது பிரதேசம் அதாஉல்லாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. அம்பாறை மாவட்டத்தில் அதாஉல்லாவும் அவரின் சார்பான இரு வேட்பாளர்களுமாக மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் மொட்டுச் சின்னத்தில் களமிறங்கி, மூவரும் வெற்றியடைவார்கள் என்று, அதாஉல்லா அணி பிரசாரம் செய்தது. இந்த நிலையில்தான், அதாஉல்லா எதிர்பார்த்த மூன்று வேட்பாளர் ஆசனங்களை அவருக்கு வழங்குவதற்கு பொதுஜன பெரமுன மறுத்தது. இத்தனைக்கும் பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளில் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைவரமானது அதாஉல்லாவுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது. “பொதுஜன பெரமுனவிடம் தனக்கான மூன்று வேட்பாளர் ஆசனங்களையே பெற்றுக்கொள்ள முடியாதவர், அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கான தேவைகளை எவ்வாறு, பெற்றுக் கொடுக்கப் போகிறார்” என்று, அதாஉல்லாவுக்கு எதிரானவர்கள் கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் அதாஉல்லாவுக்கு இவ்வாறானதொரு ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் அவரின் தேசிய காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இது – அடிமேல் அடிவிழுந்த நிலையையை அதாஉல்லாவுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய காங்கிரஸின் திருகோணமலைக்கான வேட்புமனுவில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்திலே அதாஉல்லா தரப்பு போட்டியிட்டிருந்தால், ஆகக்குறைந்தது ஒரு ஆசனத்தையாயினும் அவர்கள் வென்றெடுப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு  இருந்தது. ஆனால், அவர்கள் தனித்துக் களமிறங்கியுள்ளதால், ஒரு ஆசனத்தையாயினும் வெல்வார்களா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் அதாஉல்லா தோல்வியடைந்தமைக்கு அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டமை முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதாஉல்லாவுக்கான வாக்குளில் கணசமானவற்றினை அந்தத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. அதேபோன்றதொரு தேர்தல் களம்தான் தற்போதும் உருவாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால், அதாஉல்லாதான் இம்முறையும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

மக்கள் காங்கிரஸ் தாண்டிய தடை

இது ஒருபுறமிருக்க, அங்கீகரிக்கப்பட்ட 70 அரசியல் கட்சிகளில் சில கட்சிகளுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மறுக்கப்படும் சூழ்நிலை இருந்தது. அவ்வாறான கட்சிகளில் அகில  இலங்கை மக்கள் காங்கிரஸின் பெயரும் இருந்தது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் பதவிக்கு உரிமை கோரி, சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளதால், இம்முறை அந்தக் கட்சிக்கு – பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்படும் நிலை காணப்பட்டது.

இதனால், வை.எல்.எஸ். ஹமீட் உடன் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சமரசப் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டார். அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூல ஒப்புதலொன்றினை ஹமீட் வழங்கினார். அதன் காரணமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு இருந்த தடை நீங்கியது.

இதேவேளை, மக்கள் காங்கிரஸுடன் சமரசம் செய்து கொண்ட ஹமீட், அம்பாறை மாவட்டத்தில் அந்தக் கட்சி சார்பில் எதிர்வரம் தேர்தலில் பிரதம வேட்பாளராகப் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிரிவும் இணைவும்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து சஜித் தலைமையிலான கூட்டணியின் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு மறுத்து, அந்த மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்; புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டணியமைத்து தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்த இணைவினை பலரும் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.

முஸ்லிம் அரசியலரங்கில் அநேகமாக எதிர் அரசியலில் ஈடுபட்டு வரும் மு.காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூட்டணியமைத்து தேர்தலில் களமிறங்கும் இவ்வாறான ஆச்சரியம் – இதற்கு முன்னரும் நிகழ்ந்திருக்கிறது. ஊவா மாகாண சபைக்கான கடந்த தேர்தலில் மு.காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து ரெட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டமை நினைவுகொள்ளத்தக்கது.

புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இம்முறை வென்றெடுக்க வேண்டும் என்றும், அதற்காக முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் எனவும் தெரிவித்து, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர்களிடம் அங்குள்ள இஸ்லாமிய உலமாக்கள் பேச்சு நடத்தியமையினால்தான் அந்த மாவட்டத்தில் இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் நிலைவரம் உருவாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

அதற்கமைய ‘முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு’ எனும் கட்சியின் தராசு சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.

தராசு சின்னத்தைக் கொண்ட மேற்படி முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு எனும் கட்சியின் செயலாளராக எம். நயீமுல்லா என்பவர் பதவி வகிக்கின்றார். இவர் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மச்சான் (மாமி மகன்) என்பதோடு, மு.கா. தலைவர் அமைச்சராக இருந்த போது, அவரின் பிரத்தியேகச் செயலாளராகவும் பதவி வகித்து வகித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சேர்ந்தும் பிரிந்தும் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் சமூகத்தவர்களும் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இவ்வாறு போட்டியிடும் நிலையில், கடந்த முறை முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொண்ட 21 நாடாளுமன்ற ஆசனங்களையும், தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

‘முடியாது’ என்கிற அச்சத்தினால்தான், அந்தக் கேள்வி எழுந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமானதல்ல.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (24 மார்ச் 2020)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்