அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழு
முன்னைய ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
2015 ஜனவரி 08 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு, பொலிஸ் விசேட விசாரணை பிரிவு என்பனவற்றில் இக்காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் குறித்து ஆராய்வதற்கு இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தயா சந்தசிறி ஜயதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் அதிபர் சந்ரா பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகள், அரச கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள், படையினர் மற்றும் பாதுகாப்பு பரிவு சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் பழிவாங்கலுக்கு உள்ளானமை குறித்து ஆராய்வதற்கு இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆறு மாத காலப்பகுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும்.