மியன்மார் பிரச்சினை: பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணையைக் கோருகிறது மு.கா.

🕔 May 28, 2015

SLMC - 01மியன்மார் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக,  பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது என்று, அந்தக் கட்சியின் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனச்சுத்திகரிப்பு படுகொலைகள் உலக முஸ்லிம்களையும் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்களையும் மிகவும் மனவேதனைக்கு உட்படுத்தியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில்,  இப்பிரச்சினை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கையிலேயே, அமைச்சர் ரஊப் ஹக்கீம் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

“இந்த விவகாரத்தினை – சர்வதேச பிரச்சினைகளில் ஒன்றாக மாத்திரமன்றி, மியன்மார் ரோஹிங்கியா மக்களின் மனிதாபிமான, வாழ்வாதார மற்றும் சமயம் சார்ந்த பிரச்சினையாகவும் அணுக வேண்டும். அநீதி இழைக்கப்பட்ட அந்த மக்களை வெறும் பொருளாதார அகதிகளாக மட்டும் நோக்காமல் – தமது இருப்பையும், உடைமைகளையும் இழந்த – அரசியல் அகதிகளாகவும் பார்க்க வேண்டும். மேலும், ரோஹிங்கியா அப்பாவி மக்களின் அனைத்து விதமான உரிமைகளும் மீள வழங்கப் படவேண்டும்” என்றும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இம்மக்களுக்கு புகலிடம் வழங்குவதற்கு தயக்கம் காட்டிய மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகள் – தற்போது, மியன்மார் மக்களுக்கு புகலிடம் வழக்க முன்வந்தமையினையிட்டு அந்நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஹக்கீம் கூறினார்.

மியன்மார் ரோஹிங்கியா விவகாரம் பற்றி, 57 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின்’ மியன்மார் அகதிகளுக்கான பொறுப்பாளரான – முன்னாள் மலேசியா அமைச்சருடன் – தான் கலந்துரையாடியதாகவும் இதன்போது ரஊப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்