இனக் கலவரம் ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடக்கின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான்
நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரளையில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசும் போதே, மேற்படி தகவலை அவர் வெளியிட்டார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவிக்கையில்;
“நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்து மக்கள் அவதானத்துடன் இருந்துகொள்ள வேண்டும்.
மேலும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும்.
அத்துடன் அழுத்கம கலவரம் தொடர்பில் உடனடியாக ஆணைக்குழு அமைத்து சுயாதீன விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.