அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர், பத்திரிகையாளரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு

🕔 September 17, 2018
– பாறுக் ஷிஹான் –

டக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் எனக் கூறப்படும் என்.எம் அப்துல்லாஹ் என்பவர்,  தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவித்து  வடக்கிலிருந்து வெளியாகும்  பத்திரிகை ஒன்றின்  அலுவலகச் செய்தியாளரான சோபிகா பொன்ராஜா  என்பவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார்.

“முதலமைச்சரின் சொல்லைக் கெட்டு செய்தி போடுகிறீர்கள். அடுத்த மாதம் 30ஆம் திகதி பெரிய கலவரம் இருக்கு. அப்ப தெரியும் உங்களுக்கு”  என, அப்துல்லா தன்னை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தினார் என, இன்று திங்கட்கிழமை  தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த அச்சுறுத்தல் தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் எனக் கூறப்படும் அப்துல்லாவை அழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் தனது முறைப்பாட்டில் கேட்டுள்ளார்.

முன்னதாக, வலம்புரி பத்திரிகையின் செய்தியால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அது தொடர்பில் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் கடந்த 03ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்த நிலையிலேயே, மேற்படி பத்திரிகையின் பெண் செய்தியாளர் இன்று இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்