சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு
சிறைச்சாலை கைதிகள் அணியும் ஜம்பர் ஆடையினை, தான் சிறையில் இருந்தபோது அணியவில்லை என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஆனாலும், சிறைச்சாலை அதிகாரிகளின் பேச்சுக்கு மதிப்பளித்து, சிறைக்குள்ளே காவி உடையை கழற்றி ஓரமாக வைத்துக்கொண்டு சாரத்துடனும், தோளில் துண்டுடனும் இருந்தாகவும் அவர் கூறினார்.
பொதுபல சேனாவின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
“இந்த ஆட்சியைப் போலவே கடந்த ஆட்சியிலும் கடந்த 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் எனக்கு ஜம்பர் அணிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இம்முறை நான் சிறையில் இருந்த 05 நாட்களும் ஜம்பர் அணியவில்லை.
சிறைக் கைதிகள் ஜம்பர் அணிவது வௌ்ளைக்காரன் கொண்டு வந்த சட்டம் என்பதால், அவற்றை தான் அணியவில்லை. ஆயினும், சிறைச்சாலை அதிகாரிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, சிறைக்குள்ளேயே காவி உடையை கழற்றி ஓரமாக வைத்துக்கொண்டு சாரத்துடனும், தோளில் துண்டுடனும் இருந்தேன்” என்றார்.