வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடத் தெரியாத ஜனாதிபதி, நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார்: நாமல் கேள்வி

🕔 April 28, 2018

ர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இந்தக் கேள்வியினை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“இம்மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவசர அவரசமாக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தார். அவர் அதற்காக வெளியிட்ட வர்த்தமானியில் நாடாளுமன்றம் ஆரம்பமாகும் நேரம் சரியாக குறிப்பிடப்படவில்லை. அதனால், மீண்டும் ஒரு வர்த்தமானி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

இரண்டாவது வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவிப்பிலும் பிழை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. பின்னர் மீண்டும் நேற்று இன்னுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆளுநரை தவறாக நியமிப்பது, அமைச்சரை தவறாக நியமிப்பது என இது போன்ற சம்பவங்கள் பலவற்றை நாம் இந்த ஆட்சி நெடுகிலும் கண்டு வந்துள்ளோம்.

நாட்டின் மிக முக்கியமான சட்டத் திருத்தங்களை அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக கூறும் நிலையில், வர்த்தமானி அறுவிப்பு ஒன்றை சரியாக வெளியிடத் தெரியாதவர்களை உடன் வைத்துக்கொண்டு, நாட்டை எவ்வாறு ஜனாதிபதி வழிநடத்தப் போகிறார்” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்