08 ஆயிரம் கோடி பீப்பாய் எண்ணெய் வளமுள்ள வயல், பஹ்ரைன் நாட்டில் கண்டு பிடிப்பு

🕔 April 5, 2018

ஹ்ரைன் நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வயல் ஒன்றில் 08 ஆயிரம் கோடி பீப்பாய் அளவுக்கு நீலக்கீழ் எண்ணெய் உள்ளது என அந்த நாடு தெரிவித்துள்ளது. பஹ்ரைனில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த எண்ணெய் வளத்தைவிட விட இது பல மடங்கு அதிகமாகும்.

பஹ்ரைனின் மேற்கு கடற்கரையில் கலீஜ் அல் பஹ்ரைன் பேசின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வயலில் 28 முதல் 56 ஆயிரம் கோடி கன மீட்டர் இயற்கை வாயு இருக்கலாம் என இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.

பஹ்ரைன் எண்ணெய் வள அமைச்சர் ஷேய்க் மொஹம்மத் பின் கலீஃபா கூறுகையில் ”அந்த வயலில் இருந்து எவ்வளவு அளவுக்கு எண்ணெயை பிரித்தெடுக்க முடியும் என இதுவரை தெரியவில்லை” என்றார்.

ஆனால் இந்த நிலைவரமானது பஹ்ரைனை உலக சந்தையில் எண்ணெய் வளத்தில் செல்வாக்குள்ள நாடாக மாற்றும் எனக் கூறப்படுகிறது.

பஹ்ரைன் தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி; இந்த எண்ணெய் வயலில் இருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்கும் நடவடிக்கைகள், ஐந்து ஆண்டுகளுக்குள் தொடங்கும் என தெரியவருகிறது.

இந்த கண்டுபிடிப்புக்கு முன்னதாக பஹ்ரைன் – நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளத்தை பொருத்தவரையில், சுமார் 12.5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயையும், 9,200 கோடி கன மீட்டர் இயற்கை வாயுவையும் மட்டுமே கொண்டிருந்தது.

ஒப்பீட்டளவில், பஹ்ரைனின் பக்கத்து நாடான மற்றும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்கிய சவூதி அரேபியா 02 லட்சத்து 66 ஆயிரம் கோடி பீப்பாய் அளவுக்கு எண்ணெய் வளத்தை கொண்டிருந்தது.

கடந்த சில வருடங்களில், குறைவான எண்ணெய் வளம் மற்றும் எண்ணெய் விலையின் வீழ்ச்சி போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரத்தை நிதி சேவைகள் மற்றும் சுற்றுலா போன்றவற்றை பஹ்ரைன் அரசாங்கம் சார்ந்திருக்கத் தொடங்கியது.

நேற்று புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பொன்றில் பஹ்ரைன் எண்ணெய் வள அமைச்சர் ஷேய்க் மொஹம்மத் பேசுகையில்; இரண்டாயிரம் சதுர கிலோமீற்றர் அளவுள்ள கலீஜ் அல் பஹ்ரைன் வயலை ஆய்வுக்குட்படுத்தி மேம்படுத்தும் பொருட்டு, அயல்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை ஈர்க்க தேசிய எண்ணெய் மற்றும் வாயு திணைக்களம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மேலும் இரண்டு வயலை துளையிடவும் மேற்கொண்டு எண்ணெய் வளத்தை மதிப்பிடவும் மேலும் நீண்ட கால உற்பத்தியை துவங்கவும் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் ஷேய்க்  மொஹம்மத் தெரிவித்துள்ளார்.

பஹ்ரைன் தற்போது ஒருநாளைக்கு ஐம்பதாயிரம் பீப்பாய் அளவு எண்ணெயை பஹ்ரைன் வயலில் இருந்து உற்பத்தி செய்கிறது.

இந்த வயல் 1932-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சவூதி அரேபியாவுடன் பஹ்ரைன் பகிர்ந்து கொண்டுள்ள அபு சாஃபா வயலில் இருந்தும் தினமும் 1.5 லட்சம் பீப்பாய் எண்ணெய் பஹ்ரைனுக்கு கிடைத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்