ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முடியாது விட்டால், மஹிந்தவிடம் அரசாங்கத்தை ஒப்படையுங்கள்: ஞானசார தேரர்
அரசாங்கத்தை ஸ்திரமாகக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ முடியாது விட்டால், உள்ளுராட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசாங்கத்தை ஒப்படைக்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;
“நாட்டுக்குத் தேவையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த முடியாது விட்டால், நிறைவேற்று அதிகாரமிக்க பதவியில் ஜனாதிபதி இருப்பதில் பயன்தான் என்ன?
நாட்டில் தற்போது அரசியல் ஸ்தீரனமற்ற நிலைமை காணப்படுகின்றது. ஆகையினால், யாராவது ஒரு தரப்பினர் ஆட்சி அமைக்க வேண்டும்.
அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ முடியவில்லை என்றால், உள்ளூராட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற மகிந்த ராஜபக்ஷவுக்கு இடமளிக்க வேண்டும்.
நிறைவேற்று அதிகாரத்தில் இருந்து கொண்டு நாட்டு மக்களுக்கு தேவையான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது விட்டால், அந்த பதவியில் அவர் இருந்து என்னதான் பயன்” என்றார்.