பிணை முறி திருடர்களைப் பிடிக்க முடிந்தவர்களுக்கு, நாங்கள் செய்ததாக கூறும் திருட்டுக்களை ஏன் பிடிக்க முடியவில்லை: நாமல் கேள்வி
அரசாங்கத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியை கண்டுபிடித்தவர்கள்,எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறும் ஒரு மேசடியையேனும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதிலிருந்து, எமது கைகள் எந்தளவு சுத்தமானவை என்பதை அறிந்துகொள்ள முடியுமென நாடாளு உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
“தற்போது பிணைமுறி மோசடிக் கள்வர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர். இது எமக்கு எப்போதோ தெரியும். அந் நேரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து நிரூபிக்க முயன்றோம். அது அன்று தோல்வியுற்றாலும், இன்று வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஆட்சியானது, நாம் ஊழல் செய்தோம் என்ற பிரதான குற்றச்சாட்டை முன்வைத்தே ஆட்சி பீடம் ஏறியது. அவர்களுக்குள் உள்ள மோசடிக்காரர்களை கண்டு பிடித்தவர்களால், ஏன் எங்கள் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. நாம் ஊழல் செய்திருந்தால் விட்டிருப்பார்களா?
இது இவ்வாட்சி அமையப்பெற்ற பிறகு இடம்பெற்ற ஊழல். இந்த ஆட்சி அமையப்பெற்றதிலிருந்து நாங்கள் ஊழல் செய்தோமென கண்டுபிடிக்க பல பிரயத்தணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆட்சியாளர்களின் பிரதான பணியே எங்கள் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழலை கண்டுபிடிப்பது என்றாலும் தவறில்லை.
தங்களுக்குள் உள்ள கள்வர்களை கண்டுபிடிக்க முடியுமாக இருந்து, அவர்கள் எங்களுக்குள் உள்ளதாக கூறும் கள்வர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதனை பொய்யாகவே பார்க்க வேண்டும்.
எதிர்வரும் தேர்தல் மேடைகளில் எங்களை தவறாக சித்துரித்து பேசும் போது, இதனை சிந்தித்து தெளிவை பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.
(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)