சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கும் சொந்தம்; கட்சியைப் பலப்படுத்த ஹிஸ்புல்லாஹ் அழைப்பு

🕔 August 31, 2016
Hisbullah - 098ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது, சமூகம் – பிரதேசம் சார்ந்த கட்சியல்ல. அது முஸ்லிம்களுக்கும் சொந்தமானது எனத் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
எனவே, இக்கட்சியைப் பலப்படுத்தி, கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக, எதிர்வரும் 04ஆம் திகதி குருநாகலையில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் அதிகளவு முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;

“சுதந்திரக் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அந்தக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முஸ்லிம்களுக்கு அதிகம் சேவைகளை செய்த கட்சி என்ற வகையில் அதனைப் பலப்படுத்துவதில் முஸ்லிம்களும் அதிகம் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

முஸ்லிம்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை  எமக்கு இருக்கின்றது. நாங்கள் பல வருடங்களாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை, இந்த அரசின் கீழ் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், ஜனாதிபதியின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும்.

அந்தவகையில், சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு விழாவில் அதிகமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு, முஸ்லிம்கள் தொடர்பான நல்லபிப்பராயத்தை ஜனாதிபதி மத்தியில் ஏற்படுத்த வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கும் சொந்தமான கட்சி என்பதை நாங்கள் அடையாளப்படுத்த வேண்டும்.

பெரும் தலைவர் டொக்டர். பதியுதீன் மஹ்மூத் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் காலத்தில், முஸ்லிம்கள் அதிகம் இக்கட்சிக்கு ஆதரவளித்தனர். இதனால் அவர் சு.கட்சி ஊடாக முஸ்லிம்களுக்கு அதிகம் சேவை செய்தார்.

தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிறுபான்மை சமூகத்துக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, முஸ்லிம்களின் உரிமைகளை இக்கட்சியின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு, ஜனாதிபதிக்கு பக்கபலமாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்