20 அரசியல் கட்சிகள், 150 அமைப்புக்கள்; அரசாங்கத்துக்கு எதிராக இன்று எதிர்ப்பு போராட்டம்

🕔 November 2, 2022

ரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று (02) பிற்பகல் 3.00 மணிக்கு ஆர்ப்பாட்டப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த போராட்டங்களைக் கைவிடுமாறு அரசாங்கத்தினாலும், பல்வேறு வர்த்தக அமைப்புகளாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தில் சுமார் 20 அரசியல் கட்சிகள் பங்கேற்கவுள்ளன. இதில் ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி உள்ளிட்ட கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளன.

இந்த போராட்டத்துக்கு தங்களது முழுமையான ஆதாரவு இருக்கும் என்றும். இது அமைதியான முறையில் நடைபெறும் போராட்டம் என்பதால் இதற்கு இடையூறுவிளைவிக்க வேண்டாம் எனவும் பாதுகாப்பு தரப்பினரிடம் கோருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை வர்த்தக சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக அமைப்புகள் இந்த போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

நாட்டின் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார விடயங்கள் மீண்டுவரும் சூழ்நிலையில், சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப்பெறவுள்ள தறுவாயில் – இந்த போராட்டமானது அவற்றை சீர்குலைக்கும் செயற்பாடாக அமையும் என்று அந்த அமைப்புகள் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்