நூறடி பள்ளத்தில் வேன் வீழ்ந்து விபத்து; இருவர் படுகாயம்
🕔 April 18, 2018
– க. கிஷாந்தன் –
வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணஞ் செய்த சாரதியும், மற்றொருவரும் கடுமையான காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லிந்துலை – நாகசேனை பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 03.00 மணியளவில், தலவாக்கலை டயகம பிரதான வீதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
லிந்துலை பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை பசுமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மதிய உணவினைக் கொடுத்து விட்டு, மீண்டும் லிந்துலையை நோக்கி வரும் பொழுதே குறித்த வேன் இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் காயமடைந்த இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன். பின்னர் அதில் ஒருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் தொடர்ந்துள்ளமை குறிப்பிடதக்கது.