இந்தியாவிலிருந்து 1300 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி, இரண்டு மாதங்களில் இறக்குமதி
இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள் 1300 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்துக்கு அமைவாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை, 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தொகை முழுவதும் சந்தைக்கு விநியோகத்துக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டரிசியானது கிலோகிராம் 74 ரூபாவுக்கு விற்கப்பட்டுவருவதாக தெரிவித்த அவர், 25 கிலோவுக்கு மேற்பட்ட அரிசியை கொள்வனவு செய்பவருக்கு கிலோ கிராம் 73 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ள 30 ஆயிரம் மெற்றிக்தொன் சம்பா அரிசியில் 15 ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவுக்கான கட்டளைகள் அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும், குறித்த தொகையான அரிசியானது இந்த மாத நடுப்பகுதியில் வந்து சேருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் 926 மில்லியன் ரூபாவை செலவிடுவதாகவும் அவர் கூறினார்.