வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தில் மோசடி; 09 பேர் பணி நீக்கம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன அறிவுறுத்தல்
– முனீரா அபூபக்கர் –
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை உடனடியாக வழங்குமாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகார சபைக்கு அறிவித்துள்ளார்.
கடன் பெற்றவர்களின் கடன் தவணைகளில் பல கோடி ரூபா நிதி மோசடி செய்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட காரியாலயத்தின் கணக்காளர் மற்றும் கணக்காய்வாளர் உள்ளிட்ட 09 பேர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
அந்த அதிகாரசபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணி இடைநிறுத்தக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் வீடமைப்பு அதிகார சபையுடன் தொடர்புடைய எந்தவொரு நிறுவனத்திலும் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய நிதி மோசடி 2018 மற்றும் 2022 முதல் காலாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பான சில ஆவணங்கள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி எவரும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளையோ அல்லது தேடல்களையோ மேற்கொள்ளவில்லை என, இன்று (27) பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இதுவரையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு, பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளருக்கு அறிவித்துள்ளார்.