100 கோடி ரூபா கடனில் இயங்கும் ரூபவாஹினியின் நிலத்தை, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க திட்டம்
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 80 பேர்ச் அளவான காணியை 30 ஆண்டு குத்தகையின் அடிப்படையில் தனியார் பல்கலைக்கழகமொன்றுக்கு வழங்க அதன் திட்டமிட்டுள்ளது.
இதற்கான நிலை அளவீடு வெள்ளிக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை கூட்டுத்தாபன தலைவர் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கூட்டமொன்றும் இடம்பெற்றுள்ளது.
குறித் நிலம் – தனியார் பல்கலைக்கழகத்துக்கு 1,100 மில்லியன் ரூபாவுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்டுகிறது. தற்போது நஷ்டத்தில் இயங்கும் ரூபவாஹினிக்கு 1,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான கடன் உள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, ரூபவாஹினியின் முன்னாள் தலைவர் சொனல குணவர்தனவின் தீர்மானத்தின் படி, அதன் யூடியூப் உரிமைகளை திலித் ஜயவீரவுக்குச் சொந்தமான ‘ஐடியாஹெல்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ரூபவாஹியின் வருவாய் அரைவாசியாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திலித் ஜயவீர – அத தெரண தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னர் தமது யூடியூப் வருவாயினை ரூபவாஹினி நேரடியாகப் பெற்றபோதும், இப்போது அதனை ‘ஐடியாஹெல்’ நிறுவனம் பெறுகிறது.
அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்த பிறகும் ரூபவாஹினியின் வருமானம் குறைவதற்கான காரணத்தை தற்போதைய தலைவரோ அல்லது அதன் பணிப்பாளர் நாயகமோ ஆராயவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ‘ஐடியாஹெல்’ நிறுவனம் – ரூபவாஹின்குச் செலுத்த வேண்டிய பணத்தை பெற்றுக் கொள்வது கடினமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ரூபவாஙஹினியின் முன்னாள் தலைவரின் விருப்பப்படி ரூபவாஹினியின் யூடியூப் சேனல்களை நிர்வகிக்கும் உரிமையினை, ‘விஷ்மிதா எண்டர்பிரைசஸ்’ எனும் நிறுவனத்திடமிருந்து ‘ஐடியா ஹெல்’ நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு எதிராக, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தற்போது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ரூபவாஹினி மின்சாரக் கட்டணம் செலுத்தத் தவறியமையை அடுத்து, அதற்கான மின் விநியோகத்தை இலங்கை மின்சார சபை நிறுத்தியமையும் நினைவுகொள்ளத்தக்கது.