ராஜபக்ஷவினர் மீதான மக்களின் சீற்றம், சமூக ஊடகங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது: ஆங்கில ஊடகம் தகவல்

🕔 April 1, 2022

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்கள் சீற்றம் வேகமாக அதிகரித்து வருகிறது என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தொடர்ந்ததையடுத்து சமூக ஊடகங்களில் ராஜபக்சக்ஷவினருக்கு எதிரான கோபம் அதிகரித்து வருகிறது எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட சமூக ஊடக பயனர்கள், தற்போதைய விவகாரங்கள் குறித்து சமூக ஊடகங்களில் ராஜபக்ஷ நிர்வாகத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளனர்.

இதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக ‘வெள்ளை துணி’ பிரச்சாரம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடரவுள்ளன.

நெலும் பொக்குண மண்டபத்துக்கு வெளியே ‘வெள்ளைத் துணி’ பிரசாரம் ஆரம்பிக்கப்படும் என்றும், வாகனங்களின் பக்கவாட்டு கண்ணாடியில் வெள்ளைத் துணிகள் கட்டப்படவுள்ளன.

நாளை (சனிக்கிழமை) மாலை 05 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பிரசாரம், எதிர்வரும் வாரத்தில் அதிகளவான வாகன ஓட்டிகள் பக்கவாட்டுக் கண்ணாடியில் வெள்ளைத் துணியைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சங்கிலித் தொடர் போராட்டமாக நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி போராட்டமும் நடந்து வருகிறது.

புதன்கிழமை இரவு வாகன ஓட்டிகள் ராஜபக்ஷ நிர்வாகத்துக்கு எதிராக தங்கள் வாகனங்களின் ஹோன்களை ஒலிக்கச் செய்தனர்.

இதற்கிடையில், சில வணிக வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் ஜெனரேட்டர்களை இயக்க எரிபொருள் தீர்ந்துவிட்டதால் நேற்று முழு இருளில் மூழ்கின.

கொழும்பில் உள்ள முன்னணி வர்த்தக நிலையமான லிபர்ட்டி பிளாசாவில் நேற்று காலை மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு டீசல் இல்லை என கடை உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்