தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை ஊடகங்கள் சீர்குலைக்க வேண்டாம்: கல்முனையில் ஞானசார தேரர்

🕔 December 5, 2021

– பாறுக் ஷிஹான் –

“ஊடகங்கள் மக்களிடம் உண்மையான விடயங்களை அறிக்கையிட வேண்டும் எனவும் தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம்” என, பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்தார்.

தேரர் சனிக்கிழமை (04) இரவு கல்முனைக்கு வருகை தந்த போது, இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

இதேவேளை “முஸ்லிம்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளை தற்போது புரிந்து கொண்டுள்ளேன். இதனூடாக இனிவரும் காலங்களில் ‘ஒரு நாடு – ஒரே சட்டம்’ என்பதன் ஊடாக அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற செயலணிக் குழுவில் வழங்கப்படும் பரிந்துரைக்கு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் கூறினார்.

ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் மக்கள் கருத்தறியும் செயலமர்வுகள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற நிலையில், நேற்று மாலை தேரர் தலைமையிலான குழுவினர் கல்முனை பகுதிகளுக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது கல்முனை தாருஸ்ஸபா நிறுவனத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்த தேதர் தலைமையிலான குழுவினர், அங்கு முஸ்லிம் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை வர்த்தக சங்கப்பிரதிநிதிகள் உட்பட சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் கல்முனையின் சமகாலத் தேவைகள் பற்றிய மகஜரொன்றும் தேரரிடம் கையளிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கி அவர் கெளரவிக்கப்பட்டர்.

எனினும் அங்கு ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஞானசார தேரரை இடைமறித்து ஊடகவியலாளர்கள் விஜயத்தின் நோக்கம் தொடர்பில் வினவினர்.

இதன்போது பேசிய தேரர்; ஊடகங்கள் மக்களிடம் உண்மையான விடயங்களை அறிக்கையிட வேண்டும் எனவும் தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

“முஸ்லிம்கள் விடயத்தில் பல்வேறு பிரச்சினைகளைத் தற்போது புரிந்து கொண்டுள்ளேன். இதனூடாக இனிவரும் காலங்களில் ஒரு நாடு ஒரே சட்டம் என்ற விடயதானத்தின் ஊடாக, அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”.

“ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலனிக் குழுவில் வழங்கப்படும் பரிந்துரைக்கு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பின்னர் கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவுக்கும் சென்று அதனையும் பார்வையிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்