தூஷண வார்த்தைகளைக் கொண்ட ‘ராப்’ பாடல்: இணையத்திலிருந்து நீக்கும் படி நீதிமன்றம் உத்தரவு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வெளியான ‘ரஸ்தியாடு பதனம’ ( Rasthiyadu Padanama ) என்ற குழுவுக்கு சொந்தமான உள்ளூர் ‘ராப்’ பாடலை நீக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கள மொழியில் அமைந்துள்ள மேற்படி பாடல் – தூஷன வார்த்தைகளைக் கொண்டுள்ளதோடு, போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளதால், தற்போது கொவிட் தொற்றுக் காரணமாக இணையக் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் இந்தப் பாடல் மோசமான தாக்கத்தைச் செலுத்தும் எனத் தெரிவித்து பெற்றோர் சிலர் – பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த புகாரின் அடிப்படையில் கொழும்பு குற்றப் பிரிவு – நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இதனையடுத்து குறித்த ‘ராப்’ பாடலை உருவாக்குவதில் தொடர்புபட்ட மூன்று நபர்களை பிணையில் விடுவித்த நீதிமன்றம், அவர்கள் விடுவிக்கப்பட்டு சில மணி நேரத்துக்குள் சர்ச்சைக்குரிய பாடலை இணையத்தில் இருந்து நீக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.
நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்த பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்த தினுகா என்பவர், குறித்த பாடலை உருவாக்கி வெளியிடுவதற்கு நிதியுதவி வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.