
எழுபது வயதுக்கு மேற்பட்ட, தங்கள் அடிப்படைத் தனிப்பட்ட தேவைகளைக் கூட தாங்களே பூர்த்தி செய்துகொள்ள முடியாத பல கைதிகள், இன்னும் சிறையில் வாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பின்னர், மேன்முறையீடு செய்தமையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விஜேசிறி; நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கத் தகுதியுடையவர்களாக இருந்தும், பல தசாப்தங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளும் உள்ளனர் என்று கூறினார்.
“சிறையில் 70 வயதுக்கு மேற்பட்ட பல கைதிகள் உள்ளனர். அவர்களால் தங்கள் இயற்கைக் கடன்களைக் கூட தாங்களாகவே நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 18-வது வயதில் சிறைக்கு அனுப்பப்பட்ட கைதி ஒருவர் சிறையிலேயே உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கத் தகுதியுடைய பல கைதிகள் உள்ளனர்; ஆனால் அவர்கள் பல தசாப்தங்களாகச் சிறைக்குள்ளேயே இருக்கிறார்கள்,” என்று விஜேசிறி கூறினார்.
இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த மற்றும் அவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 28 அன்று சமிந்த விஜேசிறிக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், சமீப காலங்களில் தனக்கு இழப்புகளை ஏற்படுத்திய நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டையும் வெளிப்படையாக விமர்சித்தார்.
“கடந்த காலத்தில் நான் இழந்தவற்றுக்குக் காரணமான அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியில் உள்ளவர்களை நான் சபிக்கிறேன்” என்று அவர் கூறினார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்களையும், உகாண்டாவில் பணத்தை மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுபவர்களையும் தான் தேடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“உகாண்டாவில் பணத்தை மறைத்து வைத்திருந்த நபர்களையும் நான் தேடினேன். இருப்பினும், சிறையில் அவர்கள் யாரையும் நான் காணவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.



