அரச அலுவலர்களின் சம்பள தினத்தில் மாற்றம்
அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கான தற்காலிக நாட்களை நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி நிறைவேற்று தரமற்ற அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் 2023 ஜனவரி 25 ஆம் திகதி வழங்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று தர அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் ஜனவரி 26 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு அடுத்த தினத்தில் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிதி நிலைமை காரணமாக, குறிப்பிட்ட அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை சில நாட்கள் தாமதப்படுத்த தீர்மானித்துள்ளதாக கடந்த வாரம் (17) அரசாங்கம் அறிவித்திருந்தது.
2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் புதிய வருமானத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாலும், எதிர்பார்த்த வருமானத்தைக் குவிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், திறைசேரியின் திட்டங்களுக்கு அமைவாக அரசாங்கத்தின் செலவினங்களை நிர்வகிப்பதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதால் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் இந்த தாமதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.