அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தவருக்கு 03 லட்சம் ரூபா அபராதம்: சம்மாந்துறை நீதிமன்றம் தீர்ப்பு

🕔 June 17, 2022

ரிசியை நிர்ணய விலையை மீறி, அதிக விலைக்கு விற்பனை செய்த நிந்தவூர் பிரதேச அரிசி ஆலை உரிமையாளர் ஒருவருக்கு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் 03 லட்சம் ரூபாவை அபராதமாக இன்று (17) விதித்து தீர்ப்பளித்தது.

அரிசி ஆலைகள் – அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதாகக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, அண்மையில் அம்பாறை மாவட்டத்தில், அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட தலைமை அதிகாரி சாலிந்த நவரத்ன பண்டார தலைமையில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது கடந்த மே மாதம் 02ம் திகதி வெளியிடப்பட்ட அதி விஷேட வர்த்தமான கட்டளை இலக்கம் 82 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சிவப்பு/வெள்ளை நாடு, வேக வைத்த உள்நாடு அரிசி (சாப்பாட்டு அரிசி) போன்றவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை ஒரு கிலோவுக்கு 220 ரூபாவாக இருக்கத்தக்க நிலையில், கூடுதல் விலையாக 240 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

நிந்தவூர் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்றுக்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலணாய்வு உத்தியோகத்தர்கள் – திடீர் விஜயம் செய்து, குறித்த குற்றத்தை உறுதிபடுத்தியதுடன், ஆலை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்க்கு இன்று (17.06.2022) சம்மாந்துறை நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு, குறித்த குற்றத்துக்காக 03 லட்சம் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

2021ம் ஆண்டின் 20ம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திருத்த சட்டத்தின் படியே இந்த தண்ட பணம் விதிக்க பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்