ராஜாங்கத்துக்குள் சுருண்டு போன சுயாதீனம்: ஆடைத் துறை அமைச்சைப் பெற்று ‘அம்மணமான’ கதை

🕔 April 19, 2022

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் (சம்மாந்துறை) –

மைச்சர் பதவிகள் வேண்டாம் என, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்று எள்ளி நகையாடலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

கொரோனா ஜனாஸாக்கள் அநியாயமாக எரிக்கப்பட்டன. இன்னும் எத்தனையோ முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் விடயங்கள் பகிரங்கமாக நடத்தப்பட்டன. இந் நிலையில் புதிதாக நாடாமன்றத்துக்கு வந்த முஷாரப், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். அதன் பிறகு அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் ஆதரவளிக்கும் வேலையை பகிரங்கமாக செய்து வந்தார்.

அவர் இனவாதியான உதய கம்மன்பிலவை கூட ஆதரிக்க தயங்கவில்லை. தனது ஒவ்வொரு செயற்பாட்டுக்கம் சில நியாயங்களை அவர் சொல்லிக் கொண்டே வந்தார். தனது தீர்மானம் மக்களுக்கானது என்பதே, அவரின் சுயநலத்துக்கு, அவர் பூசும் முலாமாக இருக்கிறது.

இதனை நம்பும் சிலரும் இருக்கத் தான் செய்கிறார்கள். ராஜாங்க அமைச்சர் பதவியை அவர் ஏற்றுக்கொண்ட விடயத்தில் அவரது சுயநலத்தின் உச்சத்தை தெளிவாக விளங்க முடியும். ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை பொறுப்பெடுத்தாலாவது, அமைச்சரவைக்கு வரும் முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்கள் பற்றி பேசி, விவாதிக்க முடியும் என்றாவது கூறலாம்.

ஆனால் இவர் பொறுப்பெடுத்திருப்பது ராஜாங்க அமைச்சர் பதவி. அமைச்சரவை பக்கம் விளையாட்டுக்கும் செல்ல முடியாது. இந்த அமைச்சை வைத்துகொண்டு ஓர் அமைச்சருக்கான சுகபோகங்களை மாத்திரமே அனுபவிக்க முடியும். வேறு எதுவும் செய்ய முடியாது. தற்போது நாலு பேருக்கு தொழில் கூட வழங்க முடியாது. தொழில் வழங்க வேண்டாமென ஜனாதிபதி அமைச்சர்களுக்கு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.

இவர் எடுத்திருக்கும் அமைச்சு, இவர் தீர்க்கப்போவதாக கூறும் எந்த விடயங்களோடும் சிறிதேனும் தொடர்புபட்டதல்ல. எமது சமூகம் சார் பிரச்சினைகளோடு தொடர்புபட்ட அமைச்சை எடுத்திருந்தாலாவது ஏதாவது செய்யலாம் என யோசிக்க முடியும். ஆனால் இவ் அமைச்சு பெயரளவில் வழங்கப்படும் ஒன்றாகும். கடந்த காலங்களில் இவ் அமைச்சை பெற்றவர்கள், இந்த அமைச்சை வைத்து என்ன செய்வது என கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெசவு மற்றும் ஆடைத்துறை அபிவிருத்திக்கான ராஜாங்க அமைச்சர் பதவியை முஷாரப் இன்று (19) பெற்றுக் கொண்டமை அறிந்ததே.

இந்த அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டதன் மூலம், தனக்கான நன்மையினை மட்டுமே முஷாரப் பெற்றுக் கொள்வார். அமைச்சருக்கான சுகபோகங்களை அவர் அனுபவிப்பார். தனக்கு பெயருக்கு முன்பாக அமைச்சர் என அடையாளமிட்டுக் கொள்ளவார்.

அப்படியென்றால் அரசியலால் ஒரு சதமேனும் அனுபவிக்க மாட்டேன் என்று, அல்லாஹ்வின் மாளிகையில் இவர் செய்த சத்தியத்தின் நிலை என்ன? தற்போதைய அரசாங்கத்துக்கு, தன்னை பல இடங்களில் தாழ்த்திக்கொண்டு ஆதரவளித்த முஷர்ரப், சில நாட்களுக்கு முன் சுயாதீனமாக இயங்கப் போவாதாக கூறினார். தற்போதைய பொருளாதார சிக்கலின் போது, மக்கள் பக்கம் நிற்பதற்கே இம் முடிவை எடுத்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்திருந்தார். ஆனால் இவரது இந்த அறிவிப்பை யாருமே சீரியஸாக எடுக்கவில்லை என்பது வேறு கதை.

இவருடைய எந்தவொரு செயற்பாட்டையும் நம்பும் நிலையில் மக்களில்லை. முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்படும் போது முஸ்லிம்கள் பக்கம் நிற்காது, அரசாங்கத்தை முரட்டு தனமாக ஆதரித்த இவர். தேசிய பிரச்சினை ஒன்றின் போதாவது, ‘அரசாங்கத்தை எதிர்த்து, மக்கள் பக்கம் நிற்கப் போகிறாரே’ என்ற மகிழ்ச்சி சின்னதாக ஏற்பட்டது. ஆனால் அவர் பேசிய சத்தம் இன்னும் காதை விட்டகலாத நிலையில் ராஜாங்க அமைச்சர் பதவியை பொறுப்பெடுத்துள்ளார்.

அவருடைய சுயாதீனம் – ராஜாங்க அமைச்சுக்குள் சுருண்டுவிட்டது. அவரின் சுயாதீன அறிவிப்பை, அமைச்சர் பதவிக்கான கோரிக்கையாக அரசாங்கம் கணக்கிட்டுள்ளது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.

‘அழுத பிள்ளையே பால் குடிக்கும்’ என்பதையே, இங்கு முஷாரப் பயன்படுத்தியுள்ளார். இதை விட அசிங்கம் ஏதும் இருக்க முடியுமா? ‘தீர்வே விடிவு’ என்பது அவருடைய கோசம். இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தியாவது சமூக பிரச்சினைகளை தீர்க்க, அவர் முயற்சித்திருக்கலாம்.

அதுதான் சாதூரியமான சந்தர்ப்ப அரசியலாக இருந்திருக்கும். ஆனால் அப்படி எந்த சமூக பிரச்சினையினையும் இங்கு தீர்ந்த பாடில்லை. தீரப் போவதற்கான சாத்தியமும் தெரியவில்லை. ஒரே ஒரு பிரச்சினை தீர்ந்துள்ளது. அவரின் ‘கௌரவத்தை’ மெருகூட்ட அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

இவரின் அரசியல் நகர்வுகள் ‘தீர்வே விடிவு’ என்பதை நோக்கியதல்ல. அமைச்சராகுவதற்கான தீர்மானமானம்தான் என்பதை மீண்டுமொரு தடவை புரிய வைத்திருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்