கிறிஸ் ரொக்கை அறைந்த விவகாரம்; ஒஸ்கார் மேடையை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டதை வில் ஸ்மித் மறுத்துவிட்டார்: அகடமி தெரிவிப்பு

🕔 March 31, 2022

ஸ்கார் விருது வழங்கும் விழாவில் கிறிஸ் ரொக்கை (Chris Rock) அறைந்த பின்னர், வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற கோரப்பட்டது என்று ஒஸ்கார் அகாடமி தெரிவித்துள்ளது.

வில் ஸ்மித்துக்கு எதிராக ‘ஒழுங்கு விசாரணை’ தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒஸ்கார் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘கிறிஸ் ரொக்கை அறைந்த பின்னர், நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரினோம் ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் சூழலை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற 94வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்துக்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார்.

வில் ஸ்மித் ஒஸ்கார் விருது பெறுவது இதுவே முதல்முறை.

அகாடமியின் நடத்தை விதிகளை மீறியதால் வில் ஸ்மித்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது தலைமைக் குழு உறுப்பினர்களின் சந்திப்பு வருகின்ற ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறுகிறது என்றும், அதன் பிறகு வில் ஸ்மித் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிறிஸ்ரொக், விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள், விருந்தினர் மற்றும் பார்வையாளர்களிடம் ஒஸ்கார் அகாடமி மன்னிப்பு கோரியுள்ளது.

அறைந்தது ஏன்?

ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை, கிறிஸ் ரொக் கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ரொக்கை அறைந்தார்.

வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டை தலை குறித்து கேலியாக பேசியதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அறைந்ததாக வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

50 வயதாகும் ஜடா பிங்கெட், ‘அலோபீசியா’ என்ற முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டு வருபவர். இதை 2018இல் ஒரு நிகழ்ச்சியில் அவரே வெளிப்படுத்தியிருந்தார்.

கிறிஸ் ரொக் பேசியது என்ன?

ஜி.ஐ ஜேன் 2 படத்தில் கதாநாயகி தனது தலையை மொட்டையடித்தபடி நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்துடன் ஜடாவை ஒப்பிட்டு கிறிஸ் ரொக் கிண்டல் செய்து பேசியபோது, பார்வையாளர்கள் வரிசையில் சிரிப்பலை எழுந்தது.

அவர்களில் ஒருவராக வில் ஸ்மித் அருகே அமர்ந்திருந்த ஜடா தன் கண்களை சுழற்றி பார்த்தார். அது கிறிஸ் ரொக்கின் கருத்தை அவர் ரசிக்கவில்லை என்பதை உணர்த்தியது.

இந்த நிலையில், திடீரென்று மேடைக்கு வில் ஸ்மித் ஏறியபோது தன்னை பாராட்ட அவர் வருவதாகவே கிறிஸ் ரொக் கருதி பேசினார். ஆனால், மேடையில் அவர் அருகே சென்றதும் ஓங்கி அறை விட்டு விட்டு, மீண்டும் பார்வையாளர் பகுதியில் தனது மனைவியுடன் வில் ஸ்மித் அமர்ந்தார்.

அப்போது “தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி எனது மனைவியை பற்றி உன்னுடைய வாயால் எதையும் பேசாதே” என்று உரக்க குரல் கொடுத்தார் வில் ஸ்மித்.

இந்த நிலையில், வில் ஸ்மித்திடம் கன்னத்தில் அறைவாங்கியபோதும் அந்த சூழலை இயல்பாக்கிக் கொள்ள முயன்ற கிறிஸ் ரொக், “தொலைக்காட்சி வரலாற்றில் இது சிறந்த இரவாக இருக்கும்” என்று கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்