சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்திருக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

🕔 February 10, 2021
பீட்டர் பென் எம்பரேக்

கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்துதான் வந்தது என்பதை, கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு – கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது

“கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை” என உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் டொக்டர் பீட்டர் பென் எம்பரேக் (Peter Ben Embarek) கூறியுள்ளார்.

“கொரோனா வைரஸின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்க நிறைய வேலை செய்ய வேண்டி இருந்தது” எனவும் எம்பரேக் கூறியுள்ளார்.

சீனாவின் மேற்கே இருக்கும் ஹூபே பிராந்தியத்தில் வுஹானில் தான் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இன்று சுமாராக 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் அவ்வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதே வைரஸால் இறந்திருக்கிறார்கள்.

“இந்த ஆய்வு சில முக்கிய விவரங்களை வெளியில் கொண்டு வந்துள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விஷயங்களில் அது தலைகீழ் மாற்றங்களைக் கொண்டுவரவில்லை” என பத்திரிகையாளர் சந்திப்பில் டொக்டர் எம்பரேக் கூறினார்

கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு மத்தியில் பரவுவதற்கு முன், முதலில் விலங்குகளிடம் தோன்றி இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் அது எப்படி சாத்தியம் என அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

“கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்க முயன்ற போது, அது இயற்கையான தோற்றுவாயாக வெளவால்களைக் காட்டின. இது சீனாவின் வுஹானில் நடந்தது” என்றார் டொக்டர் எம்பரேக்.

சீனாவின் வுஹானில், அதிகாரபூர்வமாக முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி டிசம்பர் 2019-ல் அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்பு வரை அப்பகுதியில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“கொரோனா வைரஸ் வுஹானில் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், மற்ற பிராந்தியங்களில் இருந்திருக்கலாம்” என சீனாவின் சுகாதார ஆணையங்களின் நிபுணர் லியாங் வன்னியன் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்