முன்னாள் அமைச்சர் ராஜிதவும் குடும்பத்தினரும் பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டனரா; செய்தியின் உண்மைத்தன்மை என்ன? # fact check
– மப்றூக் –
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரின் குடும்பத்தினரும் பொத்துவில் – அறுகம்பே பிரசேத்துக்கு சுற்றுலா வந்த நிலையில், அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது என ‘புதிது’ செய்தித்தளத்தளம் தெரிந்து கொண்டது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரின் குடும்பத்தினரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை மீறி சுற்றுலா வந்தமை காரணமாக அவர்கள் அறுகம்பேயிலுள்ள ஹோடலொன்றில் தனிமைப்படுத்தப்பட்டதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.
இந்த நிலையில் இது தொடர்பாக பொத்துவில் பிரதேச சுகாதார பிரிவினரை ‘புதிது’ செய்தித்தளம் தொடர்பு கொண்டு உண்மை நிலைவரம் குறித்து வினவியது. அதன்போது குறித்த தகவல் பொய்யானது என அறியக் கிடைத்தது.
“ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி கொழும்பிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவரின் குடும்பத்தினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் நுவரெலியாவுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் கடந்த 28ஆம் திகதி அவர்கள் 14 பேர் பொத்துவில் – அறுகம்பே பிரதேசத்துக்கு வந்துள்ளனர்.
எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் ராஜித குழுவினர் – மேல் மாகாணத்தில் ஊடரங்குச் சட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னராகவே, கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு சென்று விட்டனர் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றும், “அறுகம்பேயில் இருந்து அவர்கள் நேற்று வெளியேறி விட்டனர்” எனவும் பொத்துவில் பிரதேச சுகாதரப் பிரிவு அதிகாரியொருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார்.