இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு
அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியுடன் இலங்கை இறைமை பொருந்தியதும், சுதந்திரமானதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாகும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
சீனா வேறு நோக்குடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், அமைச்சில் நடத்திய, கூட்டு ஊடக சந்திப்பின்போது மைக் பொம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடல் சக்திமிக்கதும் சாதகமானதாகவும் இருந்ததாகவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு தெளிவானதாகும்.
இலங்கை அபிவிருத்தியுடன் இறைமை மற்றும் சுயாதீன தன்மையுடைய நாடாக இருக்க வேண்டும்.
இலங்கைக்கு இடையிலான பொருளாதாரத்தை பலமாக்குவது தொடர்பில் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
ஆசியாவில் பிரதான ஜனநாயக நாடான இலங்கையில் அமெரிக்காவின் முதலீடுகள் மேலும் அதிகரிக்கப்படும்.
பாதுகாப்பு ஆதரவு தொடர்பாக முழுமையாக கலந்துரையாடப்பட்டது” எனவும் அவர் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதற்கு முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சந்தித்தார்.
ஜனாதிபதி காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனநாயக சுதந்திரங்களுக்கான தங்களது பகிரப்பட்ட உறுதிப்பாடு தொடர்பில் அமெரிக்க ராஜாங்க செயலாளர், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வெளிப்படையான வர்த்தகம், முதலீட்டின் அடிப்படையிலான பொருளாதார பங்காண்மை மற்றும் தொற்றுப்பரவலின் பின்னரான பொருளாதார மீட்சியின் முக்கிய அங்கங்கள் என்பன குறித்தும் அமெரிக்க ராஜாங்க செயலாளர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.