அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை வந்தடைந்தார்; சீனாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதே நோக்கம் என்கிறார் தமரா
அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை இலங்கை வந்துள்ளார்.
ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை ஆரம்பித்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் நேற்று இந்தியா வந்தடைந்தார்.
இந்த நிலையில் சீனாவுக்கு எதிரான கூட்டணியை ஏற்படுத்துவதற்காகவே மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் என முன்னாள் ராஜதந்திரி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இலங்கை இணைவதற்கான அழுத்தங்களை கொடுப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சீனாவுக்கு எதிரான கூட்டணியை ஏற்படுத்துவது குறித்து மைக் பொம்பியோ முன்னர் அறிவித்துள்ளார் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய வெளிவிவகாரக் கொள்கையை அறிவித்த பின்னரே, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் தமது சுற்றுப்பயணத்தினை ஆரம்பித்துள்ளனர் எனவும் தமரா தெரிவித்துள்ளார்.