மு.காங்கிரஸின் ஆளுகையிலுள்ள ஏறாவூர் நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் படுதோல்வி

🕔 October 12, 2020

முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள ஏறாவூர் நகரசபைக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ஐ. அப்துல் வாசித், 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை இன்று திங்கட்கிழமை சபையில் சமர்ப்பித்த பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதனை எதிர்த்து முஸ்லிம் காங்கிரஸின் 05 உறுப்பினர்கள் உட்பட 12 பேர் வாக்களித்தனர்.

குறித்த திட்டத்துக்கு ஆதரவாக 05 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதற்கமைய 07 மேலதிக வாக்குகளால் மேற்படி வரவு – செலவு திட்டம் படுதோல்வியடைந்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த அலிசாஹிர் மௌலானா அணியின் 05 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 03 உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 01 உறுப்பினர் மற்றும் பசீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் 01 உறுப்பினர் என, மொத்தம் 12 உறுப்பினர்கள் குறித்த வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனையடுத்து வரவு – செலவுத் திட்டம் திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கப்படும் என தவிசாளர் வாசித் சபையில் தெரிவித்தார்.

இதன்போது, வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களுடன், ஆதரவாக வாக்களித்த உறுப்பினரொருவர் பிரச்சினையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்