75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

🕔 July 14, 2020

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும், பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டு அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

அப்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது வடக்கில் சில தேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகமாக இடம்பெறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அதாவது வீதிகளில் வேட்பாளர்களின் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் எழுதப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அவை நிறுத்தப்பட வேண்டியவை.

இது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. அத்தோடு இங்கே அரசாங்க நிதியில் அமைக்கப்படும் வீதிகள் சில வேட்பாளர்களினால் திறந்து வைக்கப்படுகின்றன. அதனை உடனடியாக நிறுத்தும்படி நான் உத்தரவு பிறப்பித்திருக்கின்றேன்.

அத்தோடு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிப்பது தொடர்பாக நாம் ஆணைக்குழுவில் ஆராய்ந்து வருகின்றோம்.

அது தொடர்பில் விரைவில் அறிவித்தல் வரும். அதேபோல வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளவர்கள் தேர்தல் தினத்தன்று மாலை 04 தொடக்கம் 05 மணி வரை வாக்களிப்பு நிலையம் சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும்.

அண்மையில் ஒரு வேட்பாளர் 75 கள்ள வாக்குகள் போட்டது தொடர்பில் பொது இடத்தில் பேசியிருக்கிறார். இது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அது தொடர்பில் ஆணைக்குழுவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் கடமைகளில் பொலிஸார் மாத்திரமே ஈடுபடுத்தப்படுவார்கள். ராணுவத்தினர் எக்காரணத்திற்காகவும், கடமையில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் அதாவது எமக்கு ஒரே ஒரு விடயத்திற்குதான் ராணுவத்தினரின் உதவி தேவைப்படுகின்றது.

அதாவது தீவுப் பகுதிகளில் இருந்து விரைவாக வாக்குப் பெட்டிகளை வாக்கு சேகரிப்பு நிலையத்திற்கு எடுத்து வருவதற்கு விமானப்படை மற்றும் கடற்படையினரின் உதவி தேவையாக உள்ளது.

எனவே வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்துசெல்லும் பணியில் மட்டும் ராணுவத்தினர் பயன்படுத்தப்படுவார்கள். தேர்தல் கடமைகள் அனைத்திலும் பொலிஸார் மாத்திரமே ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு மாத்திரமே உள்ளது. அதனை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்