கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடைய இரண்டரை வருடங்களாகும்

🕔 May 13, 2020

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி – உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என கொரோனா வைரஸுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பான மற்றும் நன்கு பலன் தரக்கூடிய தடுப்பூசியை உருவாக்கக் குறைந்தது பதினெட்டு மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதை அதிகளவில் உற்பத்தி செய்து, 7.8 பில்லியன் உலக மக்களுக்கும் கொண்டு செல்ல, மேலும் ஒரு வருடம் ஆகும்’’ என அவர் கூறியுள்ளார்.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில், உலக சுகாதார பேராசிரியராகவும் பணியாற்றி வரும் டேவிட் நபரோ, சில வைரஸுக்கான பாதுகாப்பான தடுப்பூசி பல வருடங்களாகியும் உருவாக்க முடியவில்லை என்பதை மக்கள் நினைவில் வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

“பரிசோதனை நடத்தினால் மட்டுமே நோயை கண்டறிய முடியும். அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுவதில்லை. நமது தடுப்பு நடவடிக்கைகளை மீறி இந்த வைரஸ் வேகமாக முன்னேறிவருகிறது. மருத்துவ பணியாளர்களுடனும், மருத்துவ காப்பீட்டுச் சேவைகளுடனும் மக்கள் தொடர்பில் இருப்பது உதவக்கூடும்’’ எனவும் டேவிட் கூறியுள்ளார்.

“கொரோனா குறித்த எச்சரிக்கையை முன்பே ஏன் தெரிவிக்கவில்லை என உலக மக்கள் தங்கள் நாட்டு அரசையும், உலக சுகாதார நிறுவனத்தையும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்கள் நாம் இன்னும் விரைவாக செயல்பட்டுருக்க முடியாதா என கேட்கின்றனர். முன்பே முடிவுகளை எடுத்திருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும் என இப்போது நாம் உணர்ந்திருக்கிறோம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

வலுவான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் நபருக்கு, கொரோனா அறிகுறியே தெரியாது. ஆனால், அவரால் மற்றவர்களுக்கு நோய் பரவும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்