மரத்தில் சிக்கிய 05 அடி சிறுத்தைப் புலி; மயக்க மருந்து செலுத்தப்பட்டு மீட்பு

🕔 April 18, 2020

– க. கிஷாந்தன்

ந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 08 மணிநேரம் தவித்ததை அடுத்து, மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது உயிருடன் மீட்கப்பட்டது.

மஸ்கெலியா – காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது.

மேற்படி தோட்டத்தில் சிறுத்தை சிக்கியிருப்பதை அறிந்த தோட்ட முகாமையாளர், அது தொடர்பில் இன்று சனிக்கிழமை மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். அதன்பின்னர் பொலிஸார் ஊடாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து ராணுவம், பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தோட்ட மக்களும் குவிந்தனர்.

மரக்கறி தோட்டமொன்றில், மிருகங்களிடமிருந்து விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே 04 வயதான இச்சிறுத்தை புலி சிக்கியுள்ளது என்றும், மக்கள் நடமாட்டத்தை கண்டதும் வலையை பிய்த்துக்கொண்டு மரத்தின் மீது ஏறியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மரத்தின் உச்சிக்கே சென்ற பிறகு, வலையில் இருந்த பலகைதுண்டு, மரத்தின் கிளைகளுக்கிடையில் இறுக, கீழ் இறங்க முடியாமல் சிறுத்தைப் புலி சிக்கிக்கொண்டது.

பின்னர் ரந்தெனிகல மிருக வைத்தியசாலையிலிருந்து, அனுப்பி வைகப்பட்ட மிருக வைத்திய அதிகாரியொருவர், துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தியதை அடுத்து, சிறுத்தைப் புலி கீழிறக்கப்பட்டது.

சிகிச்சைகளுக்காக மினிப்பே மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பப்டுள்ள சிறுத்தைப் புலி, குணமடைந்த பின்னர் சரணாலயத்தில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்