மரண தண்டனையை எதிர்நோக்கி 458 பேர் உள்ளனர்: சிறைச்சாலைத் திணைக்களம்
இலங்கையில் தற்போது 458 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாக, சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1178 பேருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும், அவர்களில் 720 பேர், தமது தண்டனைகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் 30 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களாவர். இவர்களில் 18 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். 12 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர்.
போதைப் பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்தமைக்காக மரண தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மேற்படி 18 பேரில் பெண் ஒருவரும், நான்கு பாகிஸ்தானியர்களும் அடங்குவர்.
போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்களில் நால்வருக்கான தண்டனையை அமுல்படுத்துவதற்கான ஆவணங்களில், அண்மையில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.