மின்சார வேலியில் சி்க்கி, விவசாயி பலி
– க. கிஷாந்தன் –
மிருகங்களிடம் இருந்து மரக்கறி தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி, விவசாயி ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று, கொட்டகலை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக, திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை ஹெரின்டன் குடியிருப்புத் தொகுதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.தர்மலிங்கம் (வயது 63) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் நள்ளிரவில் அதிகரித்திருப்பதால், அச்சத்துடனேயே இரவுப் பொழுதைக் கழித்துவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மரக்கறி பயிற்செய்கையை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் இவர்களுக்கு, காட்டுப்பன்றிகளிடமிருந்து தோட்டங்களைப் பாதுகாப்பதற்கு, மின்சார வேலைகள் அமைப்பதைத் தவிர, வேறு வழிகளில்லை என்பது குறிப்பிடத்தக்கது.