விடைபெறும் தருணத்தில் உசைன் போல்ட் அதிர்ச்சித் தோல்வி; விழுந்து பணிந்தார் வென்றவர்

🕔 August 6, 2017

குறுந்தூர ஓட்டப் பந்தையத்தில் நிகரில்லாதவர் என அறியப்பட்ட ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்; உலக தடகள போட்டியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் ஓட்ட போட்டியில் மூன்றாமிடத்துக்கு வந்து, உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

மேற்படி போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கட்லின் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் 16-வது உலக தடகள போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. 205 நாடுகள் பங்கேற்கும் இதில் 24 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. பிரபல ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் இந்த போட்டிகளுடன் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உசேன் போல்ட், ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

உலக தடகளத்தில் 11 தங்கப் பதக்கங்களை அள்ளியிருக்கும் இவர், தோற்கடிக்கப்படாமல் விடைபெறுவேன் என, போட்டிக்கு முன்னதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், மிக முக்கிய போட்டியான 100 மீற்றர் ஓட்டப் பந்தயம் நேற்று நடைபெற்றது.

இதில், அமெரிக்க வீரர் கட்லின் 100 மீற்றர் தூரத்தை 9.92 விநாடிகளிலும், அவரது சக வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 9.94 விநாடிகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர். இந்த நிலையில், போல்ட் 9.95 விநாடிகளில் மூன்றாம் இடத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் மட்டுமே பெற்றிருந்தாலும், ரசிகர்கள் போல்ட்டுக்கு சிறப்பான மரியாதையுடன் பிரியாவிடை வழங்கினர்.

போல்ட்டின் போட்டியாளராக இருந்து வந்த 35 வயதான ஜஸ்டின் கட்லின், 2ஊக்க மருந்து குற்றச்சாட்டுக்கு உள்ளானமையினால், 2006 முதல் 2010 வரையிலான போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், முதலிடத்தைப் பெற்ற கட்லின், பந்தையக் களத்தில் உசேன் போல்ட்க்கு முன்னால் பணிந்து தனது வெற்றியை அர்ப்பணித்தமை பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது.

வீடியோ

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்