இம்ரானை பிரதமாக்கும் திட்டம், மூன்று வருடங்களுக்கு முன்னரே தீட்டப்பட்டது: அம்பலப்பலமாக்கினார் முன்னாள் மனைவி

🕔 July 29, 2018

ம்ரான் கானை ஆட்சிக்குக் கொண்டு வரும் திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டதாக இம்ரானின் முன்னாள் மனைவியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான் தெரிவித்துள்ளார்.

மேலும், “இம்ரானுக்கு பல சிக்கலான விஷயங்கள் புரியாது. ராணுவத்தின் சொல்படிதான் அவர் நடப்பார்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்கு ரேஹம் கான் வழங்கிய பேட்டியிலேயே, இந்த தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

தி இந்து பத்திரிகைக்கு ரேஹம் கான் வழங்கிய பேட்டி வருமாறு;

கேள்வி: இம்ரான் கான் கட்சியான பிடிஐ-யின் வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள்? குறிப்பாக 05 தொகுதிகளிலும் இம்ரான் வெற்றி பெற்றமை குறித்து…

ரேஹம் கான்: முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு முன் கூட்டியே தெரியும். ஆனால் அதே சமயத்தில் தேர்தல்கள் முறையாக நடந்திருந்தால், நியாயமாக நடந்திருந்தால் இம்ரான் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.

பிடிஐ கட்சியைப் பற்றி அறிந்திராத கைபர் பதுன்க்வா பகுதியிலும் இம்ரான் கட்சி வெற்றி பெற்றது சாத்தியமேயில்லை. கராச்சி, லாகூர் போன்ற இடங்களில் கூட, நல்ல அனுபவமிக்க பல வேட்பாளர்கள் – ஊர்பேர் தெரியாத இம்ரான் கட்சி வேட்பாளர்களிடம் தோற்றுள்ளனர்; இதைத்தான் நம்ப முடியவில்லை.

கேள்வி: நீங்கள் இம்ரானை ராணுவ வேட்பாளர் என்று கூறுகிறீர்கள். ஆனால் பாகிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆசீர்வாதங்களுடன்தானே வருகின்றனர்?

ரேஹம் கான்: நிச்சயமாக. 2013ஆம் ஆண்டு நவாஸ் ஷெரிப் குறித்து இம்ரான் கான் கூறும்போது; அவரும் ஆட்சியதிகாரத்தின் ஆதரவில் வாழ்பவர் என்றுதான் கூறினார். எனவே இம்ரானுக்கும் இது தெரியும். இந்த தடவை, ராணுவ அதிகாரமானது, தன் அதிகாரத்தைப் பயன்படுத்த திட்டமிட்டு, இம்ரான் கானுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. இந்தியா, சீனா கொள்கைகளில் தனித்து இயங்க நவாஸ் ஷெரீப் முயன்றார். இது ராணுவத்துக்கு அதிருப்தி அளித்தது. இப்போது இம்ரான் மிகவும் பொருத்தமான ஒரு பொம்மை, ஒரு கைப்பாவை கிடைத்துள்ளது.

சிக்கலான விஷயங்களில் அவருக்கு எந்த ஒரு அறிவும் கிடையாது. ராணுவத்தின் சொல்படிதான் அவர் நடந்தாக வேண்டும்.

கேள்வி: உங்கள் புத்தகத்தில் இம்ரான் கானை உருவாக்கியது ராணுவம் என்று கூறியிருந்தீர்கள், ஆனால் 2008-ல் ராணுவ ஆட்சியின் கீழ் தேர்தல்களை இம்ரான் புறக்கணித்துள்ளாரே?

ரேஹம் கான்: ஒரு மனைவியாக எனக்குத் தெரியும். எப்போதுமே ராணுவத்துடன் தனக்கு இருக்கும் தொடர்பை அவர் பேசிஉள்ளார். 2008-ல் தன்னை அவர்கள் ஆதரிக்கவில்லை என்ற ஏமாற்றத்தினால் தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம்.

ஆனால் எனக்கு அவரை நன்றாகத் தெரியும், எப்போதும் ராணுவம் தனக்கு ஆதரவு என்றே அவர் கூறிவந்தார். தான் பிரதமராவோம் என்று அவர் உறுதியாக நம்பினார், இதற்கான திட்டம் 2-3 ஆண்டுகளுக்கு முன்பே தீட்டப்பட்டு விட்டது.

தொடர்பான செய்தி: பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்ரான் கான், ஓகஸ்ட் 14க்கு முன் பதவியேற்பார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்