நீதிமன்றில் ஆஜராகுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 59 பேருக்கு அழைப்பாணை
– மப்றூக் –
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 59 மாணவர்களை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05ஆம் திகதி) நீதிமன்றில் ஆஜராகுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
நீதிமன்ற உத்தரவினையும் மீறி, பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தினுள் மறியல் போராட்டம் நடத்தியவர்களுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டத்திற்குள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் கடந்த 28ஆம் திகதி புகுந்து, மறியல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பல்கலைக்கழக நிருவாகம் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில், மறியல் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை, அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் கடந்த 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
ஆயினும், நீதிமன்ற உத்தரவினையும் மீறி – தொடர்ந்தும் தமது மறியல் போராட்டத்தினை மாணவர்கள் முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையிலேயே, நீதிமன்ற உத்தரவினை மீறிச் செயற்பட்ட 59 மாணவர்களையும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05ஆம் திகதி) நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்களிடம், இன்று புதன்கிழமை பொலிஸார் அழைப்பாணையினை ஒப்படைத்துள்ளதாகத் தெரியவருகிறது.