பொதுச் சொத்தை செலவு செய்வதில் மஹிந்தவை மிஞ்சிய மைத்திரி: வாய்ப் பேச்சில் மட்டும் வீரராக இருந்தாரா?

🕔 December 2, 2022

னாதிபதிக்கான மொத்த செலவினத்தில் 43 வீதத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாகவும், முன்னாள் ஜனாதிபதி மைதிபால சிறிசேன 57 வீதத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உத்தரவு மூலம் இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை 630 மில்லியனுக்கும் (ரூபா 638, 107, 941. 84) அதிகமான செலவில் 2,578 பேர் கொண்ட தனிப்பட்ட ஊழியர்களை பணிக்கு அமர்த்தியிருந்தார். மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலமான 2015 முதல் 2019 வரை ரூ.850 மில்லியனுக்கும் (ரூப 850, 326,958.14) அதிகமான தொகையை செலவு செய்து 1,317 பேரை பணிக்கு நியமித்திருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள், இரண்டு ஜனாதிபதிகள் தமது தனிப்பட்ட ஊழியர்களை பராமரிப்பதற்காக ரூபா 1480 மில்லியனுக்கும் (ரூ.1488, 434.900.00) செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த வகையில் ஜனாதிபதிக்கான மொத்த ஒதுக்கீட்டில் 57 வீதமான தொகையை தனது தனிப்பட்ட ஊழியர்களைப் பராமரிப்பதற்காக மைத்திரிபால சிறிசேன செலவிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ – மொத்த ஒதுக்கீட்டில் 43 வீதத்தினை இதற்காகச் செலவிட்டுள்ளார்.

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதை தவிர்த்துக் கொள்வதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கான தனிப்பட்ட ஊழியர்களை பராமரிப்பதற்கான செலவில், தமக்கு முன்பிருந்த ஜனாதிபதியை விடவும், மிஞ்சியுள்ளமை, ஜனாதிபதி செயலகம் வழங்கிய விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே 2019 ஆம் ஆண்டு இது தொடர்பான விவரங்களை கோரியிருந்த போதிலும் ஜனாதிபதி செயலகம் அதனை நிராகரித்திருந்தது.

இருந்தபோதிலும், ஜனாதிபதி செயலகத்தின் தீர்மானத்துக்கு எதிரான மேன்முறையீட்டை பரிசீலித்த தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், 2022 நொவம்பர் 14 அன்று உரிய விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்