கைதிகள் 58 பேர் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவிப்பு: நேற்றைய தாக்குதலுடன் தொடர்புள்ளதா?

🕔 May 10, 2022

ரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறைச்சாலைக் கைதிகளும் பங்குபற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது.

வட்டரேகா திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் உள்ள கைதிகளும் மேற்படி தாக்குதல் நடத்தியவர்களில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படும் செய்திகளை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க மறுத்துள்ளார்.

சிறைச்சாலை திணைக்களத்தின் வழமையான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ், 03 கட்டுமான தளங்களில் புனர்வாழ்வு பணிகளுக்காக வட்டரேகா சிறைச்சாலையில் இருந்து 181 கைதிகள் சிவில் உடையில் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த கைதிகள் நேற்று கொள்ளுப்பிட்டி, ராஜகிரிய மற்றும் பத்தரமுல்லை ஆகிய இடங்களில் உள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பும் போது பொதுமக்களால் தாக்கப்பட்டதாகவும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தலஹேன பகுதியில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தில் இருந்து , அவர்களை பொதுமக்கள் வெளியேற்றி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் கைதிகளும் பங்கேற்றிருந்தார்கள் என நினைத்து பொதுமக்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பப்பட்ட 181 கைதிகளில் 58 கைதிகள் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கைதிகள் யாரேனும் உதவிக்காக தம்மை அணுகினால் அவர்களுக்கு உதவுமாறும் அவர்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் சந்தன ஏக்கநாயக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்