டொலர் தட்டுப்பாடு காரணமாக, இலங்கையின் 03 வெளிநாட்டுத் தூதரகங்கள் மூடப்படுகின்றன

🕔 March 22, 2022

டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளில் உள்ள இரண்டு இலங்கை தூதரகங்கள் மற்றும் ஒரு தூதரக அலுவலகத்தை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஈராக் மற்றும் நோர்வே நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தூதரக அலுவலகம் ஆகியவற்றை மார்ச் 31 ஆம் திகதி தொடக்கம் மூடுவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகளை கருத்திற்கொண்டே வெளிவிவகார அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதன்மூலம், ஈராக்குடனான இலங்கை விவகாரங்கள் ஐக்கிய அரபு ராச்சியத்தின் துபாயில் உள்ள தூதரக அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும். நோர்வே விவகாரங்கள் ஸ்வீடனில் உள்ள தூதரகம் வழியாக கவனிக்கப்படும். கான்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சிட்னி தூதரக அலுவலகத்தின் விவகாரங்களைக் கையாளும்.

வெளிநாடுகளில் 63 இலங்கை ராஜதந்திர தூதரகங்கள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 03 தூதரகங்கள் மூடப்பட்டதன் மூலம் மொத்த அலுவலகங்களின் எண்ணிக்கை 60 ஆக குறைந்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டு ராஜதந்திர பணிகளைச் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்