
ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதிகளை சஜித் பிரேமதாச கொண்டுள்ளார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி வேட்பாளராக பிரபலமடைந்துள்ளவர் அமைச்சர் சஜித் பிரேமதாச. இவரை வெற்றியடையச் செய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவும் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
“எனது அபிப்ராயத்துக்கமைய, அமைச்சர் சஜித் பிரேமதாசவே பிரபல்யமடைந்துள்ளார். அவருக்குத்தான் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதிகள் உள்ளன” என்றும், மங்கள கூறியுள்ளார்.
“மறு பக்கம் யார் வந்தாலும், எந்த ராஜபக்ஸ வந்தாலும் குடும்பத்துக்குள்ளே சங்கீத கதிரை போட்டியாக அது மாறும். எது எப்படியோ அமைச்சர் சஜித்தை வெற்றிப் பெறச் செய்வதற்கான வழி எமக்கு தெரியும்” என்றும் தெரிவித்துள்ளார்.



