நிறம் மாறுகிறது வீதிக் கடவை; மஞ்சள் இனி இல்லை
நாட்டிலுள்ள வீதிக்கடவைகளின் மஞ்சள் கோடுகள், வெள்ளை நிறங்களாக மாற்றப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதி முதல் இந்த மாற்றம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச தரத்திற்கமைய இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்த நிஹால் சூரியாராச்சி, வெள்ளைக் கோடுகள் மிகவும் தெளிவாக, பார்வைக்குப் புலப்படும் எனவும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இரவு வேளைகளில் வெள்ளைக் கோடுகள் துலக்கம் கொண்டவையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையினை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் ஒவ்வொரு மாகாணத்திலும் இடம்பெறவுள்ளன. அந்தவகையில், மேல் மாகாணத்துக்கான ஆரம்ப நிகழ்வு டிசம்பர் 03 ஆம் திகதி நடைபெறும்.
நாட்டிலுள்ள சகல வீதிக் கடவைகளும் எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் மேற்குறிப்பிட்டவாறு நிமாற்றம் செய்யப்படவுள்ளமையினை, சட்ட மா அதிபருக்கு தாம் அறிவித்துள்ளதாகவும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் மேலும் கூறினார்.
மேற்படி நிறமாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.