சைக்கிளில் அலுவலகம் வருவோருக்கு கடனுதவி; லேசான ஆடையில் வரவும் அனுமதி: நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் அறிவிப்பு

🕔 October 27, 2022

– முனீரா அபூபக்கர் (ஊடகப் பிரிவு) –

லக நகரங்கள் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 31ஆம் திகதி திங்கட்கிழமை – முதல் வாரத்தில்; ‘ஒரு நாள் சைக்கிள் வேலை’ திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாடு செய்துள்ளது.

உலக நகர தினமான ஒக்டோபர் 31ஆம் திகதி – இதன் ஆரம்ப விழா நடைபெறவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

பின்னர் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ‘சைக்கிள் வெள்ளி – மிதிவண்டியில் வேலைக்கு போவோம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு, பணியாளர்கள் சைக்கிளில் வேலைக்குச் செல்ல வசதி செய்யப்படும் என, நகர அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது.

இதன் ஆரம்ப விழா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பத்தரமுல்ல செத்சிறிபாயில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வளாகத்தில் 31ஆம் திகதி காலை 8.15 மணிக்கு நடைபெறவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர கூறுகையில்; “சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரம் மற்றும் ஆரோக்கியமான குடிமக்களை உருவாக்குதல், போக்குவரத்து நெரிசலை குறைத்தல், நகரின் பக்கவாட்டு வீதிகளை பிரபலப்படுத்துதல் போன்ற நோக்கத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்” என்றார்.

துவிச்சக்கர வண்டியில் பணிக்கு சமூகமளிக்கும் ஊழியர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் துவிச்சக்கரவண்டி மன்றத்தின் அங்கத்தினருக்கு மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“துவிச்சக்கர வண்டியில் பணிக்கு வரும் ஊழியர்களின் சைக்கிள்களை நிறுத்தி வைக்க, அமைச்சின் வளாகத்தில் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்களுக்கு சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன”.

“துவிச்சக்கர வண்டியில் வேலைக்குச் செல்லும்போது, ​​அந்த ஊழியர்கள் லேசான ஆடைகளை அணிந்து பணிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்” எனவும் கூறினார்.

“சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தனியான பாதைகளை வழங்குதல், புகையிரத நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எதிர்காலத்தில் கலந்துரையாடவுள்ளோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்