மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்: தேசிய கொள்கை பரப்பு செயலாளர் ஜவாத்

🕔 May 1, 2021

– நூருல் ஹுதா உமர் –

கொழும்பில் றிசாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தைப் பகைத்து கொள்ளக்கூடாது என்பதால் கலந்துகொள்ளாமை தொடர்பில் உயர்பீடத்தில் நடவடிக்கை எடுப்போம் என, அந்தக் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார்.

“றிசாத் பதியுதீன், ரஊப் ஹக்கீம் ஆகியோரின் பேரம் பேசும் சக்தியை இல்லாமலாக்கி 20க்கு கையுயர்த்திய அவர்களின் கட்சி சார்ந்த 07 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுக்க தயாராக உள்ளது” என்றும் அவர் கூறினார்.

“எங்களின் கட்சி – மக்கள் சார் கட்சி. யாருக்கும் காத்திருக்க மாட்டாது. விரும்பியவர்கள் இருக்கலாம், விரும்பாதவர்கள் புறமுதுகு காட்டி ஓடலாம். சலுகைகளுக்கு சோரம் போகும் யாருக்கும் இங்கு இடமில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது மேற்கண்ட விடயங்களை ஜவாத் கூறினார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்;

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வலது கரத்தை போன்று கடந்த காலங்களில் இருந்தவர்தான் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன். தான் நிர்வகித்த அமைச்சுக்களில் எவ்வித ஊழலும் செய்யாதவர், தனது அமைச்சின் கீழ் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களை லாபத்தில் இயங்க செய்தவர் என பல்வேறுபட்ட கௌரவங்களை பெற்ற ஏழைகளின் துயரமறிந்த தலைவரே றிசாத் பதியுதீன்.

அவரின் கைது அநீதியானது. அதற்கு எதிராக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் அதிர்வொன்றை உருவாக்க எண்ணியுள்ளோம். அதில் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம்.

சட்டத்துக்கு முரணாக வீட்டை உடைத்துக்கொண்டு றிசாத் பதியுதீனை கைது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் கைதுக்கு முஸ்லிம் அல்லாத மக்களும் தமது எதிர்ப்பை வெளியிடுவதிலிருந்து அவரின் சமூக உணர்வை அறிந்து கொள்ள முடியும்.

அவர் கைது செய்யப்பட்டுள்ளது செம்பு விடயத்தில் என்றால், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரின் சிபாரிசுக்கு இணங்கவே அவர் அதை செய்துள்ளார்.

அவரைக் கைது செய்தமையின் முக்கிய நோக்கம் முஸ்லிங்களுக்கு எப்போது பிரச்சினை வந்தாலும் அப்போது துணிவாக அவர் பேசுவதனாலாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போதும் மிக தைரியமாக பேசிய ஆளுமையான அந்த தலைவரின் கைதை ஏற்க முடியாது.

நாங்கள் இன சௌஜன்யத்தை பாதுகாக்க வேண்டும் என்பதனாலையே வீதிக்கு இறங்க வில்லை. நாங்கள் போராட வீதிக்கு இறங்கினால் மடைதிறந்த வெள்ளமாக இருக்கும். எங்களை யாரும் தடுக்க முடியாது.

ஊடகங்கள் உண்மையாக செயற்பட்டு முழு ஒத்துழைப்பை இவ்விடயத்தில் வழங்க முன்வரவேண்டும். ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ், பாதுகாப்பு தரப்பு என்பன ஒன்றிணைந்து தலைவர் றிசாத்தின் குரலுக்கு செவிசாய்த்து விடுதலை செய்ய வேண்டும்.

அவருடைய கைது நியாயமாக இருந்தால் குற்றங்களை நிரூபித்து ஆதாரங்களை வெளியிடுங்கள். இந்த நாட்டை வறுமையின் பிடிக்கு கொண்டுசெல்லாமல் ஜெனீவாவில் நடந்ததை படிப்பினையாக கொண்டு அரசாங்கம் நடக்க முன்வர வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்