65 மீற்றர் கடற்கரைப் பகுதிக்குள் அமைந்துள்ள நிர்மாணங்கள் சட்டவிரோதமானவை: கல்முனை பிரதேச செயலாளர் அறிவிப்பு

🕔 November 20, 2020

– சர்ஜுன் லாபீர் –

ல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 65 மீற்றர் கரையோரப் பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிர்மாணங்கள் சட்ட விரோதமானவை என, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தெரிவித்துள்ளார்.

அப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் கைவிடுமாறும் , இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகளை காணியிலிருந்து அகற்றுமாறும் சம்பந்தப்பட்டோரை கேட்டுக் கொள்வதாகவும் பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டுளார்.

இவ்வாறான சட்டவிரோத அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பிரதேச செயலாளர் எச்சரித்துள்ளார்.

“65 மீற்றர் கரையோர பாதுகாப்பு எல்லைக்குள் காணப்படும் காணிகள் அனைத்தும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வளங்கள் திணைக்களத்திற்குரியதாகும் . இக்காணியில் பிரதேச செயலாளரினது அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளும்சட்டவிரோதமானவையகும்.

மேலும் கல்முனை பிரதேச செயலாளரினால் ஏற்கெனவே வழங்கப்பட்டு இற்றை வரைக்கும் புதுப்பிக்கபடாமலிருக்கும் முடிக்குரிய காணியை ஆட்சி செய்யும் அனைத்து அனுமதிப்பத்திரங்களும் செல்லுபடியற்றதாகும்.

இவ் அனுமதிப்பத்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிரோத செயற்பாடாகும் .

அத்துடன் 65 மீற்றர் கரையோரப் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி வாடி அமைத்தல், கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபடுதல் மற்றும் காணிகளை வாங்கல் – விற்றல் போன்றவையும் சட்ட விரோத செயற்பாடுகளாகும் .

மேற்படி சட்டவிரோத செயற்பாடுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் கைவிடுமாறும் , இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகளை காணியிலிருந்து அகற்றுமாறும் சம்பந்தப்பட்டோரை கேட்டுக் கொள்கின்றேன் .

இவ்வாறான சட்டவிரோத அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்” எனவும் பிரதேச செயலாளர் மேலும்தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்