தேர்தல் தோல்வியை ஒத்துக் கொள்வதில் ட்ரம்ப் குடும்பத்துக்குள் விரிசல்: எதிர் கருத்தில் மனைவி மெலானியா

🕔 November 9, 2020

மெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தமையை ஒப்புக் கொள்வது தொடர்பாக,அவரது நெருங்கிய வட்டத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகமான சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்பின் மருமகனும் அவரது மூத்த ஆலோசகருமான ஜேரட் குஷ்னர் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் அமெரிக்காவின் முதல் சீமாட்டியுமான மெலானியா ட்ரம்ப் ஆகியோர் – தமது தேர்தல் தோல்வியை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று, ட்ரம்ப் இடம் கூறியுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சி.என்.என் தெரிவித்துள்ளது.

ஆனால் டிரம்பின் மகன்கள் டொனால்ட் ஜூனியர் ட்ரம்ப் மற்றும் எரிக் ட்ரம்ப் ஆகியோர் – தேர்தல் முடிவுகளை நிராகரிக்குமாறு பொதுவெளியில் வெளிப்படையாக வலியுறுத்தி வருகின்றனர்.

நடந்து முடிந்துள்ள தேர்தல் வாக்குப்பதிவில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் அவர் தரப்பில் இதற்கான் எந்த ஆதாரங்களும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

இவரது பிரசாரக் குழுவினர் சில மாகாணங்களில் தொடர்ந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றங்களில் இது தொடர்பாக முறையீடு செய்யும் முயற்சிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அவரது குடியரசு கட்சியிலிருந்து குறைவான ஆதரவே கிடைத்துள்ளது.

தேர்தல் மற்றும் ஆட்சி மாற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிவடைவதற்கு முன்பு சட்ட ரீதியான பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டுமென்று குடியரசுக் கட்சியில் ஒரு தரப்பு ட்ரம்ப் அணியை வலியுறுத்துகிறது.

தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டும் ட்ரம்ப் அணியினர் அதற்கான ஆதாரத்தை முன் வைக்க வேண்டும் இல்லாவிட்டால் எதுவும் பேசாமல் இருக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர்கள் அவரது அணியினரிடம் வலியுறுத்தியுள்ளதாக சி.என்.என் செய்தி தெரிவிக்கிறது.

ஆனால் தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் தங்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ட்ரம்ப் தரப்பு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்றாலும் பைடன் வெற்றி பெற்றுள்ள மாகாணங்களில் தேர்தல் முறைகேடு நடந்ததாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

தாமதமாகக் கிடைத்த பல தபால் வாக்குகளை செல்லாத வாக்குகள் என்று அறிவிக்க வேண்டும் என்று ட்ரம்ப் தரப்பு கோரிக்கை வைக்கும் முயற்சி ஒருவேளை உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம்.

ஆனால், அந்த வழக்கில் முடிவு தேர்தல் முடிவை மாற்றுவதற்கான வாய்ப்பில்லை என்றே சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சில மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூட உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம். எனினும், தேர்தல் முடிவுகளில் இதனால் பெருமளவில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்