வைத்தியசாலையிருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பிடிபட்டார்
அங்கொட தொற்றுநோய் சிகிச்சைக்கான வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
மேற்படி வைத்தியசாலையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 41 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.
இதனை அடுத்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரை தேடி கண்டுபிடிக்கும் நோக்கில் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இந்நிலையில் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனை அடுத்து சற்று முன்னர் குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியில் இருந்த கைது செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தப்பிச் சென்ற குறித்த நபர் கோட்டை – பிரதான வீதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றின் மூலமே கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதிக்குச் சென்றதாகவும் தெரியவருகிறது.
குறித்த நபர் போதைப் பாவனைக்கு அடிமையானவர் எனவும் தெரியவருகிறது.