இலங்கைக்கான உதவிகளை வெளிப்படுத்தினார் மனோ கணேசன்: தரவுகளோடுதான் பேசுவேன் என்றும் தெரிவிப்பு

🕔 April 28, 2020

ற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில், இலங்கைக்குக் கிடைத்துள்ள சர்வதேச உதவிகளை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் “நான் எப்போதும் தரவுகளோடுதான் பேசுவேன். என்னுடன் விளையாட வேண்டாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

(1) அமெரிக்கா – 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் (இலங்கைப் பெறுமதியில் ரூபா 250,691,220)
(2) சீனா – 500 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் (ரூபா 96,419,700,000)
(3) சீனா – பரிசோதனை உபகரணங்களையும்
(4) உலக வங்கி – 128 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் (ரூபா 24,683,443,200)
(5) ஐரோப்பிய யூனியன் – 22 மில்லியன் யூரோவினையும் (ரூபா 4,591,664,242)
(6) ஆசிய அபிவிருத்தி வங்கி – 8,170,000 ரூபாவையும்
(7) இந்தியா – மருந்து வகைகளையும்

இலங்கைக்கு வழங்கியுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

“மேற்கண்ட வெளிநாட்டு உதவிகள், இலகு கடன்கள் கிடைக்கவில்லை என்றால், இவை தொடர்பாக அரசாங்கம் மறுக்க வேண்டும். இங்கே சொல்லப்பட்டவை, நானறிந்த உதவிகள். இன்னமும் இருக்கலாம். இவை பொருளாகவா, பணமாகவா வருகின்றன என்பவற்றை பற்றி ஆராய எனக்கு நேரமில்லை.

சர்வதேச சமூகம் தம் உதவிகளை, நோட்டு கட்டுகளாக, சாக்கு மூட்டையில் கட்டி கொடுக்காது.

இதை தவிர உள்நாட்டில் தனியார் நிறுவனங்கள், கொடையாளிகள் நிதி வழங்கியுள்ளார்கள். சுகாதார அமைச்சு சொல்லும் மருத்துமனைகளை அபிவிருத்தி செய்ய டயலொக் நிறுவனம் இருபது கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள்.

இங்கே சில அரசாங்க ‘வால்’கள் வெளிநாட்டு உதவிகள் பற்றி என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். இதைவிட இவர்கள் தங்கள் தலைவர்களிடம்தான் கேள்வி கேட்க வேண்டும்.

நான் படிக்காத முட்டாள் அல்ல. நான் எப்போதும், ஒன்றை சொன்னால் அதை நிரூபிக்கும் தரவுகளோடுதான் சொல்வேன். இதுபற்றி இதற்குள் இவர்கள் அனைவரும் புரிந்துக்கொண்டிருக்க வேண்டும்.

‘கொரொனா நோயாளிகளுடன் நேரடியாக பழகிய, 40,000 முதற்தொற்றாளர்கள் இந்நாட்டில் இருக்கின்றார்கள், இவர்களை டெஸ்ட் செய்யுங்கள்’ என நான் கடந்த வாரம் சொன்னேன். இன்று அது உண்மையாகி விட்டது.

இதை நான் சொன்னபோது, என்னை ‘கைது செய்’ என்று கூறிய தேரரும், ‘சிறுபான்மை கட்சி தலைவர்கள் தேசிய விஷயங்கள்பற்றி பேசக்கூடாது’ என்ற மாதிரி இனவாத நோக்கில் என்னை விமர்சனம் செய்த அரசாங்க அமைச்சர்களும் இன்று எங்கே?

எரியும் தீயான என்னுடன் விளையாட வேண்டாம்” என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்